சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து சாலை பாதுகாப்பிற்காக 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியில் பங்கேற்கின்றனர்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த 20 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனைகள் படைத்த ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இந்தியா), பிரையன் லாரா, சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்), பிரெட்லீ (ஆஸ்திரேலியா), ஜான்டி ரோட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), முரளிதரன், தில்ஷன் (இலங்கை) உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
இந்த போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 110 முன்னாள் வீரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின் வாயிலாக கிடைக்கும வருமானம் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த 20 ஓவர் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: